காரைநகரில் கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம் மற்றும் நகைகளுடன் இருவர் கைது!
காரைநகரில் வெளிநாட்டினரின் வீடுகளைக் குறிவைத்த திருட்டு வழக்கில் இருவர் கைது; களவாடப்பட்ட டொலர்கள், நகைகள், கடவுச்சீட்டு மீட்பு. நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை.
காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டன.
இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தது.
விசாரணையின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 20 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

